-
சோஷியல் கான்சியஸ்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்ட்
டாக்டர் P.நம்பெருமாள்சாமி,
சேர்மன் எமிரிட்டெஸ்
அரவிந்த் ஐ கேர் சிஸ்டம்
சமூகமும் தொழிலும் எப்போதும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத நெருக்கமும் இறுக்கமும் கொண்டவை. ஒவ்வொரு தொழிலதிபரும் சமூகத்தின் வளர்ச்சியை ஓர் அங்குலமாவது உயர்த்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் முற்றிலுமாக சமூக சேவையையே நோக்கமாகக் கொண்ட தொழில்செய்வோர்க்காக வழங்கப்படும் விருதுதான் சோஷியல் கான்சியஸ்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்ட்
இந்த விருதை யாருக்கு வழங்கலாம் என்று நாலாபக்கமும் தேடிப் பார்த்தபோது, நம் கண்களில் பட்டவர், அரவிந்த் கண் மருத்துவமனையின் சேர்மன் எமிரிட்டெஸ், டாக்டர்.பி.நம்பெருமாள்சாமி. கண்களுக்கும் இவருக்கும் நீண்டகால உறவு உண்டு.
'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்ற பாரதியின் வரிகளுக்கு அர்த்தம் சேர்ப்பது, விழியில் ஒளியேற்ற வெளிச்சம் பாய்ச்சுவது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. மருத்துவச் சேவை என்ற வார்த்தைக்கு மகத்தான உதாரணம், மதுரையின் பெருமைகளில் ஒன்று இது. கண் மருத்துவரான டாக்டர் வெங்கடசாமி, தனது மைத்துனர் டாக்டர் பி.நம்பெருமாள்சாமியுடன் 1976-ம் ஆண்டு மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனையைத் தொடங்கினார்.
இந்த மருத்துவமனையைத் தொடங்கிய காலத்திலேயே டாக்டர் வெங்கடசாமியும், டாக்டர் நம்பெருமாள்சாமியும் உயர்ந்த லட்சியம் ஒன்றில் உறுதியாக இருந்தார்கள். இது வெறுமனே மருத்துவமனை மட்டும் அல்ல, சமூகசேவையுடன் செயல்படக்கூடிய நிறுவனம் என்பதுதான் அவர்களின் உன்னதக் குறிக்கோள். வெறும் 15 ரூபாய் செலவில் கண் மருத்துவம் என ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சைக் கட்டணம், பல ஆண்டுகளுக்கு மாற்றப்படாமலேயே இருந்தது. இப்போது கொஞ்சம் உயர்ந்திருந்தாலும் அது ஏழைகளுக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது.
மருத்துவம் வியாபாரமாக மாறிப்போன காலகட்டத்திலும்கூட, சேவையே அரவிந்த் கண் மருத்துவமனையின் அடித்தளமாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்துவந்து இங்கு சிகிச்சை செய்து, பலன்பெற்றுச் செல்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கானவர்களுக்குக் கண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 5.2 கோடி வெளிப்புற நோயாளிகளூக்கு சிகிச்சை அளீக்கப்பட்டுள்ளது. 59 லட்சம் பேருக்கு மேல் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தங்கள் பார்க்கும் திறனை திரும்பப் பெற்றுள்ளனர். உலக அளவில் வேறு எந்தவொரு கண் மருத்துவமனையும் செய்யாத சிகிச்சை இது. இவை ஏதோ வெறும் எண்கள் அல்ல, சமூக சேவையால் ஒளிபெற்ற கண்கள்.
சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் கண் மருத்துவம் செய்வதாலும் லாபம் சம்பாதிக்க முடியும் என்கிற உண்மையை உதாரணத்துடன் உலகுக்கு எடுத்துச் சொன்னது அரவிந்த் கண் மருத்துவமனை. இதை அறிந்த நிர்வாக மேதை சி.கே.பிரகலாத், அமெரிக்காவிலிருந்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்து, இதைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து, தன்னுடைய Bottom of the Pyramid என்கிற புத்தகத்தில் விளக்கமாகப் பதிவுசெய்தார்.
இவர்களின் சமூகசேவை என்பது மருத்துவமனையின் வராந்தாவோடு முடிந்துவிடவில்லை. தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், பேருந்துகளே செல்லாத கிராமங்களிலும் இலவச மருத்துவ முகாம்களை அரவிந்த் கண் மருத்துவமனை நடத்துகிறது. முகாம்களில் கண்டறியப்படும் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, வெறும் கண் மருத்துவம் என்பதுடன் நின்றுவிடாமல், கண்ணில் பொருத்தப்படும் லென்ஸினை நம் நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் அதன் விலையை மிகவும் குறைத்தது. வெளிநாடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டுவந்த கண் மருந்துகளும் உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை படைத்தது அரவிந்த் கண் மருத்துவமனை.
அரவிந்த் கண் மருத்துவமனை தொடங்கக் காரணமாக இருந்த பெரியவர் டாக்டர் வெங்கடசாமி கடந்த 2006-ம் ஆண்டு இறந்தபின், மருத்துவமனையின் நோக்கத்தையும், லட்சியத்தையும் சிறிதளவும் குறையாமல் திறம்பட நடத்தி வருகிறார் டாக்டர் பி.நம்பெருமாள்சாமி. அவரது அயராத உழைப்பினைப் பார்த்து அதிசயித்த 'டைம்' பத்திரிகை, 2010ல், உலகின் மிகச் சிறந்த 100 மனிதர்களில் ஒருவராக அவரைத் தேர்வு செய்து கெளரவித்தது. பொருத்தமான விருது பெற்ற பொருத்தமான மனிதர்.
78 வயது ஆனாலும் இன்னமும் சமூகச்சேவையின் மீதான பிடிப்பு குறையாமல் உழைத்துவரும் டாக்டர் நம்பெருமாள்சாமி, ஒரு மருத்துவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான முன்னோடி முன்னுதாரணம். பெயரிலேயே இவர் 'நம்' பெருமாள்சாமி, ஆம், நமக்கான பெருமாள்சாமி. இவருக்கு 'சோஷியல் கான்சியஸ்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்ட்' அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்!