-
ஸ்டார்ட்அப் சேம்பியன் அவார்ட்
அதில் ஷெட்டி,
நிறுவனர் & சி.இ.ஓ.,
பேங்க் பஜார்.காம்
ஸ்டார்ட்அப் - இந்தியா முழுக்க இருக்கும் இன்றைய இளைஞர்களின் எதிர்காலக் கனவு. லட்சியத் தீயில் வார்த்தெடுக்கப்படும் வர்த்தகக் கனவு. ஏற்கெனவே இருக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதைவிட, ஒரு புதுமையான நிறுவனத்தை நாமே உருவாக்கலாமே என்பது அவர்களின் லட்சியம். இது இப்போதைய நிலை என்றால், பத்தாண்டுகளுக்கு முன் ஸ்டார்ட் -அப் என்பது காணப்படாத கனவாக இருந்தது, நிறைவேறுமா என்று நினைக்கப்படாத நினைவாக இருந்தது. ஆனால் அப்போதே ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி காண நினைத்தவர் அதில் ஷெட்டி.
இன்று வங்கி என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. வெறுமனே பணம் போடவும், எடுக்கவும்தான் வங்கிகள் என்ற காலம் மலையேறிவிட்டது. எல்லா வர்த்தக நடவடிக்கைகளும் வங்கிகளின் மூலம்தான் சாத்தியம் என்பது இன்றைய எதார்த்தம். வீடு, வாகனம் எனப் பல்வேறு கனவுகளை நனவாக்க, வங்கிக் கடன்களையே நாடவேண்டியிருக்கும். ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் பர்ஸிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன.
இப்படி வங்கிச்சேவை என்பது வளர்ந்திருக்கும் சூழலில் அதுகுறித்த சந்தேகங்களும் இரட்டைக் குழந்தைகளைப்போல் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது. எந்தச் சேவைக்கு எந்த வங்கியை அணுகுவது, எந்த வங்கியில் எந்தக் கடனுக்கு எவ்வளவு வட்டி என்பதைப் பலருக்கும் எடுத்துச் சொன்ன நிறுவனம்தான் பேங்க் பஜார். வங்கி விஷயத்தில் சாதாரண மக்களின் குழப்பங்களைக் களையும் வித்தியாசமான ஐடியாதான் அதில் ஷெட்டி தொடங்கிய பேங்க் பஜார் என்னும் ஸ்டார்ட் அப்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்தவர் அதில் ஷெட்டி. அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் படிப்பை முடித்து, பெங்களூருவில் சிஸ்கோ சிஸ்டம்ஸில் தனது பணியைத் துவங்கியவருக்கு உதித்ததுதான் பேங்க் பஜார் ஐடியா.
கிரெடிட் கார்டு துவங்கி இன்ஷூரன்ஸ், கடன், முதலீடு என அனைத்து வங்கிச் சேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் தீர்வு வழங்குகின்றது பேங்க் பஜார் நிறுவனம். அமேசான் உள்பட பல்வேறு வென்ச்சர் ஃபண்டிங் நிறுவனங்கள் பேங்க் பஜார் நிறுவனத்தில் சுமார் 750 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளன. தனது நிதிச் சேவையை 2.3 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.
மக்கள் எல்லோரும் வங்கி வாசலுக்கு சென்று காத்திருக்காமல், ஆன்லைன் மூலம் அனைவருக்கும் நிதிச் சேவை செய்து வரும் இந்த நிறுவனம் நாளைய டிஜிட்டல் உலகின் நம்பிக்கையாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவரும் அதில் ஷெட்டிக்கு ஸ்டார்ட் அப் சேம்பியன் அவார்ட் அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்!