-
பிசினஸ் மென்ட்டார் அவார்ட்(இன்ஸ்ட்டிடியூஷன்)
டை சென்னை (TiE Chennai)
சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு சரியான பாதைகளை காட்டி அவர்கள் தொழிலில் வெற்றிபெற உதவுகிறது ‘டை சென்னை’. அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் சிறப்பாகச் செயல்பட்டுவந்த இந்தியாவை சேர்ந்ந ஐ.டி. தொழில்முனைவர்கள், ஐ.டி நிறுவன உயரதிகாரிகள், புரபஷனல்களுக்கு ஒரு நீண்ட கால ஏக்கம் இருந்தது. ‘நம்மை வளர்த்தெடுத்த தாய்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு நம்மால் உதவ முடியவில்லையே!’ என்பதுதான் அது.
அந்த எண்ணம்தான் 1992-ம் ஆண்டில் செயல்வடிவம் பெற்றது. ‘தி இண்டஸ் ஆந்த்ரபிரினர்’ என்கிற அமைப்பு உருவானது. அன்று தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்றைக்கு 17 நாடுகளில் 60 சேப்டர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘டைசென்னை’ 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இன்று `டைசென்னை’யில் 175 சார்ட்டர் மெம்பர்கள், 600 அசோசியேட்ஸ் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். புதிய தொழில்முனைவர்களுக்குத் தொழில் ஆலோசனை தந்து உதவுகிற வகையில் மென்ட்டாரிங் செய்வது, தொழில்முனைவர்கள் தங்களுக்கு நல்லறவை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிற மாதிரி நெட்வொர்க்கிங் கூட்டங்கள், பிசினஸ்மேன்களின் திறமைகளை வளர்த்தெடுக்கும் ஒர்க்ஷாப்புகள் என ‘டைசென்னை’ அமைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான ஆரம்ப கால நிதியை மூலதன உதவியையும் தந்துவருகிறது. பல ஆயிரம் தொழில்முனைவர்கள் இந்த அமைப்பின் வழிகாட்டுதலால் பயன் பெற்று, இன்றைக்கு மிகச் சிறந்த பிசினஸ்மேன்களாக விளங்குகின்றனர். சிறப்பாகத் தொழில் நடத்திவரும் தொழில்முனைவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க ‘டைகான்’ என்கிற நிகழ்ச்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்கிற பாரதியின் வரிகளுக்கேற்ப தொழில்முனைவர்களை உற்சாகப்படுத்தி, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவிவரும் ‘டைசென்னை’ அமைப்புக்கு பிசினஸ் மென்ட்டார் அவார்ட் ஃபார் இன்ஸ்ட்டிடியூஷன் விருதினை வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!