-
லைப் டைம் அச்சிவ்மென்ட் அவார்ட்
திரு.ஜி.ராஜேந்திரன்
சேர்மன்
ஜி.ஆர்.டி குரூப்
இன்று பிரபலமான ஜூவல்லரி சாம்ராஜ்யமாக உயர்ந்து நிற்கிற ஜி.ஆர்.டி குரூப்பின் சேர்மன் திரு.ஜி.ராஜேந்திரன். எத்தனையோ உயரங்களை எட்டிவிட்ட போதும் குறையாத எளிமையும் தவறவிடாத நேர்மையுமாக வாழ்பவர். மிகச் சாதாரண நிலையில் தொடங்கி தன் அயராத உழைப்பால் இன்று அவர் அடைந்திருக்கிற இடம் ஒவ்வொரு தொழில்முனைவோருக்குமான பவர்ஃபுல் இன்ஸ்பிரேஷன்.
55 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி ஒன்றில் ஆய்வாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் ராஜேந்திரன். அங்குதான் அவர் தங்க நகைகள் மீது மக்களுக்கு இருக்கிற பந்தத்தை அறிந்துகொண்டார். ஒரு நகைக்கடையை சொந்தமாகத் தொடங்க முடிவெடுத்தார். அவரது தாயார் மகாலட்சுமி அம்மாளின் உதவியால் தி.நகரில் 1964-ம் ஆண்டில் 400 சதுர அடியில் நூறு ரூபாய் வாடகையில் மிகச்சிறிய கடையைத் தொடங்கினார்.
தரமான தங்க நகை, வித்தியாசமான டிசைன்கள், நியாயமான விலை, மகிழ்ச்சி தரும் சேவை... எத்தனை இடர்வந்தபோதும் இந்த நான்கு விஷயங்களில் இன்றுவரை ராஜேந்திரன் இம்மியளவும் தவறியதே இல்லை. ராஜேந்திரனின் நேர்மையும் உண்மையும் கடையில் முதல்முறையாக தங்க நகை வாங்கியவர்களை எல்லாம் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றியது. சில ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தி.நகரில் ஜி.ஆர். தங்க மாளிகை என்கிற பெயரில் பெரிய அளவில் ஷோரூம் ஒன்றைத் திறந்தார். அந்த சிறிய ஷோரும் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. இன்று அந்த ஜி.ஆர்.தங்க மாளிகை, திரு.ஜி.ராஜேந்திரனின் புதல்வர்களான ஜி.ஆர்.அனந்தபத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன், நிர்வாகத்தின்கீழ் இந்தியா முழுக்க 46 கிளைகளுடன் மிகப் பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, துபாயிலும், சிங்கப்பூரிலும்கூட கொடிகட்டிப் பறக்கிறது ஜிஆர்டி.
வெறும் ஜூவல்லரியாக மட்டுமே நின்றுவிடாமல், நட்சத்திர ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள், வேளாண்மைத் துறை, மாற்று எரிசக்தி எனப் பல துறைகளில் கிளை பரப்பி, புதிய சகாப்தம் படைத்து வருகிறது ஜி.ஆர்.டி நிறுவனம். பணம் சம்பாதிப்பது என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்காமல் தன்னை வெற்றியாளனாக உருவாக்கிய சமூகத்திற்கும் தன்னால் முடிந்த பல உதவிகளைச் செய்துகொண்டேயிருக்கிறார் திரு.ஜி.ராஜேந்திரன். சென்னையில் உள்ள சங்கர நேத்ராலாவுக்கு ரூ.1 கோடி, கேன்சர் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி, வர்தா புயலுக்கு நிவாரணத் தொகையாக ரூ.50 லட்சம், கேரள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம், கஜா புயலுக்கு ரூ.50 லட்சம் என எங்கெல்லாம் உதவிகள் தேவையோ அங்கெல்லாம் ராஜேந்திரனின் உதவிக்கரங்கள் இருந்திருக்கின்றன.
தன் உழைப்பாலும் தேடித்தேடி உதவும் கரத்தாலும் மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற ஜி.ஆர்டி.குரூப்பின் சேர்மன் திரு. ஜி.ராஜேந்திரன் அவர்களுக்கு லைப் டைம் அச்சிவ்மென்ட் அவார்ட் வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!