-
எம்.எஸ்.எம்.இ ஸ்டார் அவார்ட்
திரு.என்.சண்முகம்
சேர்மன் & சி.இ.ஒ
டி.எம்.டபிள்யு சி அண்ட் சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான் நம் இந்திய நாட்டில் அதிகம். அதிலும் இந்தியாவிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஒவ்வொன்றும் எளிய மனிதர்களின் வெற்றிக்கு கிடைத்த மகத்தான அடையாளங்கள். DMW CNC SOLUTIONS நிறுவனம் அப்படிப்பட்ட அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் சேர்மன் என்.சண்முகம்
எளிய விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். சிறுவயதிலிருந்தே சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் எப்போதும் மனதில் கனன்று எரிந்துகொண்டிருந்தது. தனது நண்பர்களான கல்லூரிப் பேராசிரியர்கள் சிலருடன் இணைந்து 1991ல் டீசல் மெஷின் ஒர்க்ஸ் (DMW) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மிக நுட்பமாக செய்யப்படும் ஹை பிரிசிசன் மெஷின்ட் கம்போனன்ட்களையும், அதன் உதிரிப்பாகங்களையும் செய்யும் வேலையை மிகச் சிறப்பாக செய்துதருவதில் பெயர் பெற்று விளங்குகிறது திரு,சண்முகத்தின் DMW நிறுவனம்.
மிகச் சிறிய முதலீட்டில் 1991ம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனம், இன்றைக்கு 150 கோடி ரூபாய் அளவுக்கு டேர்ன் ஓவர் செய்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. 150-க்கும் மேற்பட்ட சி.என்.சி மெஷின்கள் மற்றும் 800-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தத் தொழில் நிறுவனம் தரம் ஒன்றையே தாரகமந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
டி.வி.எஸ். எல்.எம்.டபிள்யூ எனப் பெரிய நிறுவனங்களில் பின்பற்றும் நல்ல விஷயங்களை தங்களது நிறுவனத்திலும் நடைமுறைப்படுத்துவதில் அலாதியான அக்கறையுடன் செயல்படுகிறார்கள். இந்த நிறுவனம் பெருந்துறை தவிர, வாடிக்கையாளர் நிறுவனங்களின் வசதிக்கேற்ப கோவை, ஒசூரிலும் தொழிற்சாலை அமைத்து நடத்தி வருகிறது. விரைவில் ராணிப்பேட்டையில் தனது தொழிற்சாலையைத் தொடங்கவிருக்கிறது டி.எம்.டபிள்யு.
தொழிற்சாலை மட்டுமின்றி டி.எம்.டபிள்யு சி.என்.சி சென்டர் மூலம் பள்ளி, கல்லூரியில் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிற மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினையும் உருவாக்ககித் தருகிறது. எதிர்காலத்தில் இன்னும் பல்கி பெருகி பலமடங்கு வளர்ச்சி காண வாய்ப்புள்ள இந்த நிறுவனத்துக்கு சிறந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனத்துக்கான விருதினை திரு.சண்முகம் அவர்களுக்கு தருவதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது.