-
பீனிக்ஸ் அந்த்ரபிரினர் அவார்ட்
எஸ்.அபய குமார்
சேர்மன்
லைஃப்செல்
தடைக்கற்கள் என் வெற்றியின் படிக்கற்கள் என வீறுகொண்டு எழுந்து வெற்றி பெற்றவர் அபயகுமார். நாற்பது ஆண்டுகளுக்குமுன்பு ஷாசூன் கெமிக்கல் என்கிற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார் அபயகுமார்.
ஜெனரிக் மருந்துகளைத் தயாரிக்கும் இந்த நிறுவனம் வேகமான வளர்ச்சி கண்டதன் விளைவாக பாண்டிச்சேரி, கடலூர் எனப் பல இடங்களில் தொழிற்சாலை அமைத்து, மருந்துகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது. சில ஆண்டுகளுக்குமுன் ஷாசூன் நிறுவனத்தை தொழில் துறை சார்ந்த நிபுணர்களே தலைமை தாங்கி நடத்தட்டும் என அபய குமாரின் குடும்பத்தினர் முடிவெடுத்தனர். ஆனால், அந்த முடிவு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையவில்லை. நிறுவனம் வீழத்தொடங்கியது. அபய குமார் மீண்டும் நிறுவனத்தின் தலைமையை ஏற்றுக்கொண்டார். நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்தார். இங்கிலாந்தில் வாங்கிய மருந்து நிறுவனமும் ஆரம்பத்தில் நஷ்டம் தர, அதை சில ஆண்டுகளிலேயே லாபத்துக்குக் கொண்டுவந்தார்.
மருந்துப் பொருள்களைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில், அமெரிக்காவில் தொப்புள் கொடியினைப் பாதுகாத்து வைத்து, அதன்மூலம் பல நோய்களைக் குணப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறித்து அறிந்தார். வீணாகத் தூக்கியெறியப்படும் தொப்புள் கொடியின் மகத்துவத்தை மக்கள் அறியச் செய்யும் பணியில் இறங்கினார். அப்படிப்பிறந்ததுதான் ‘லைஃப் செல்’.
தனது குடும்பத்தில் முதல் தலைமுறைத் தொழிலதிபராக வெற்றிப்பாதையில் சாதனைகள் பல கண்ட அபயகுமார் புதிதாகத் தொழில் தொடங்க ஆலோசனை கேட்டுவரும் இளைஞர்களுக்கு தான் பெற்ற அனுபவங்களின் மூலம் வழிகாட்டுவதுடன், சோதனைகள் இன்றி சாதனைகள் இல்லை என்கிற மந்திரத்தையும் எடுத்துச் சொல்வார். காரணம், வியாபாரம் என்பது ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது என்பதை நன்கறிந்தவர் அவர்.
தனது வாழ்நாளின் இலக்காக 100 தொழில்முனைவர்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்து செயல்படும் அபய குமார், தற்போது வரை 45 தொழில்முனைவர்களை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார். முனைப்பும் அக்கறையும் உண்மையான உழைப்பும் இருந்தால் வெற்றிக்கு எதுவுமே தடையில்லை என்று உற்சாக உள்ளத்துடன் வலம் வரும் திரு.அபயகுமாருக்கும் பீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்ட் வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!