-
செல்ஃப் மேட் பில்லினர் அவார்ட்
திரு.பி.செளந்தரராஜன்
நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர்,
சுகுணா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்.
உழைப்புக்கு முன்னால் எதுவுமே துச்சம்தான்... என்பதற்கு சமகால உதாரணம் சௌந்தரராஜன். சுகுணா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர். உடுமலைப்பேட்டைக்கு பக்கத்தில் சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் ஆசிரிய தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். `படிப்பு முடிந்ததா... எங்காவது வேலைக்கு போ...' என விரட்டுகிற ஆர்டினடரி தந்தை அல்ல சௌந்தரராஜனின் தந்தை. தொழிலுக்குப் பெயர்போன கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரல்லவா ... `படித்து முடித்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கு' என்று வித்தியாச அறிவுரை சொன்னார்.
தந்தையின் 20 ஏக்கர் நிலத்தில் விவசாயமாகத் தொடங்கியது சௌந்தரராஜனின் முன்னேற்றப்பயணம். ஒவ்வொரு நாளும் 16 மணிநேர கடும் உழைப்பு. இருந்தும், விவசாயத்தில் போதிய பயிற்சி இல்லாமல் போனது தோல்விக்கு காரணமானது. ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நஷ்டம். மனமுடைந்த சௌந்தரராஜன் ஹைதராபாத்திற்கு கிளம்பினார். அங்கே தனது சகோதரியின் கணவர் நடத்திவந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நிர்வாகம் உள்பட பல தொழில் நுணக்கங்களை சௌந்தர்ராஜன் கற்றுக்கொண்டது அங்குதான்.
காலம் ஓடுகிறது. தொழில் கற்றவர் ஊருக்கு திரும்புகிறார். இந்த முறை தோற்றுவிடக்கூடாது என்கிற வைராக்கியம் நிறைந்து இருக்கிறது. ஊரில் இருக்கும் நிலத்தில் கோழிப் பண்ணையைத் தொடங்கினார். அதற்காக அவர் முதலீடு செய்த தொகை 5,000 ரூபாய். ஹைதராபாத்தில் கற்றுக்கொண்ட நிர்வாகமும் கடின உழைப்பும் கைகொடுக்க அடுத்த சில ஆண்டுகளில் அவரது பிசினஸ் 7 கோடி ரூபாயை எட்டியது.
உடுமலைப்பேட்டையைத் தாண்டியும் தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை பரவலாக்கினார். 7 கோடி 100 கோடியாக உயர்ந்தது. ஆனால் அத்தோடு ஓய்ந்துவிடவில்லை. அடுத்து என்ன என்று யோசித்தார். கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, குஜராத், ஒரிஸா, மேற்கு வங்காளம் என ஆண்டுகொரு மாநிலமாக தொழிலை விரிவுபடுத்தினார். அடுத்த சில ஆண்டுகளில் அவரது நிறுவனத்தின் டேர்ன் ஓவர் மலைக்கவைக்கிற அளவுக்கு 2000 கோடியாக உயர்ந்தது.
சுகுணா ஹோல்டிங்ஸ் இன்று ஒற்றை நிறுவனம் அல்ல, கால்நடைகளின் நலன் காக்க ஒரு நிறுவனம், மருந்துப் பொருள்களைத் தயாரிக்க ஒரு நிறுவனம். சர்வதேச சந்தையிலும் கோழி வளர்ப்புக்கு ஒரு நிறுவனம், சமையல் எண்ணெய், பால் உற்பத்தி செய்யத் தனித்தனி நிறுவனங்கள் என வளர்ந்து உயர்ந்து நிமிர்ந்து நிற்கிறது. 8500 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிற நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.
இன்று உடுமலைப்பேட்டையிலேயே சுகுணா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் பவுல்ட்ரி மேனேஜ்மென்ட் என்கிற கல்லூரியை நடத்தி, அதன்மூலம் கோழி வளர்ப்பு பற்றி அறிவியல் முறையில் கற்றுத்தருகிறார் செளந்தரராஜன். தமிழகத்தின் இளம் தலைமுறைத் தொழிலதிபர்களுக்கு ஒரு ஆதர்ச உதாரணமாக விளங்கும் திரு.பி.செளந்தர்ராஜனுக்கு செல்ஃப் மேட் ஆந்த்ரபிரினர் விருதினை வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!