-
சோஷியல் கான்சியஸ்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்ட்
‘தான்’ (DHAN) ஃபவுண்டேஷன்
மதுரை
லாபம் சம்பாதிக்கிற நிறுவனங்கள்தான் எல்லாமே. ஆனால் மிகச் சில நிறுவனங்கள்தான் லாபத்தை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்காமல் சமூகப்பொறுப்போடும் அக்கறையோடு செயல்படக்கூடியவையாக இருக்கும்., அப்படிப்பட்ட அரிய நிறுவனஙளில் ஒன்று தான் மதுரை ‘தான்’ அறக்கட்டளை.
Development of Human Action என்பதின் சுருக்கமே DHAN. மக்களால் தானம் அறக்கட்டளை என அழைக்கப்படும் மதிப்பிற்குரிய நிறுவனம். இந்த அறக்கட்டளையை 1997-ம் ஆண்டு தொடங்கினார் திரு.மா.ப.வாசிமலை. மதுரையின் எழுமலையில் பிறந்து வேளாண்பட்டம் பெற்று, ஐ.ஐ.எம்.மில் எம்பிஏ படித்தவர். படிக்கும்போதே, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக உழைப்பதைவிட, சமூகத்தின் எளிய மனிதர்களுக்காக பாடுபட வேண்டும் என்கிற இலக்கும், லட்சியமும் அவரிடமிருந்தது. அந்த எண்ணத்தின் விளைவாகவே தானம் அறக்கட்டளையை உருவாக்கினார்.
அடித்தட்டு சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களின் மிகப் பெரிய பிரச்னை, பணத் தேவைதான். திடீர் திடீரென ஏற்படும் பணப் பற்றாக்குறையை சமாளிக்க அதிக வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள். ஒருகட்டத்தில் வட்டியையும், அசலையும் திரும்பக் கட்ட முடியாமல் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள். இதுபோன்ற மக்களுக்கான வாழும் உரிமையை உறுதி செய்ய ‘களஞ்சியம்’ என்ற குழுக்களை - மக்கள் நிறுவனங்களை உருவாக்கி வருகிறது தான் அறக்கட்டளை. வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாத சாதாரண மக்கள் இந்தக் குழுக்களில் சேர்ந்து பணத்தைச் சேமிக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இப்படிச் சிறுகச் சிறுகச் சேர்த்த தொகை 600 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
தான் அறக்கட்டளையினால் ஏறக்குறைய 17,69,666 குடும்பங்கள் நன்மை பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 19,915 கிராமங்களைச் சேர்ந்த 70,808 குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த மக்கள் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து களஞ்சிய வளர்ச்சி நிதி நிறுவனம் என்ற குறுநிதி அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன. குறைந்த வட்டியில் தங்களது குழுக்களுக்குக் கடன் அளித்து வருகின்றன.2018 மார்ச் மாத முடிவின்படி, மக்கள் சேமித்த பணம் 1,031 கோடி ரூபாய், இந்த நிறுவனத்தின் பிரதானத் திட்டமான சமூக வங்கித் திட்டத்தின்மூலம் இதுவரை 4,85,919 பேர் பயன்பெற்றுள்ளனர்.
அதுமட்டுமல்ல வயலகம் என்கிற திட்டத்தின்மூலம் குளம், ஏரி ஆழப்படுத்தி, பாசன விவசாய நிலங்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருகிறது. கடற்கரையோரத்தில் உள்ள வளங்களைக் காப்பதன்மூலம் மக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மழையை மட்டுமே நம்பி விவசாயம் நடக்கும் இடங்களில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கும் உதவும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது தான் அறக்கட்டளை. எளிய மக்களை வறுமையிலிருந்து மீட்டு, வாழ்வில் முன்னேற்றம் காண உதவுவதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் ‘தான்’ அறக்கட்டளை நிறுவனத்துக்கு சோஷியல் கான்சியஸ்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்ட் வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!