-
பிசினஸ் மென்ட்டார் அவார்ட் (இன்ஸ்டிடியூஷன்)
பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்
நகரம் - கிராமம், படித்தவர் - படிக்காதவர், ஆண் - பெண் என எந்தப் பாகுபாட்டையும் பார்க்காமல், அனைவருக்கும் தொழில் வழிகாட்டுவதில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்.
நம் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வெங்கட்ராமனின் மகள், லட்சுமி வெங்கடேசன். இவர் 27 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அமைப்புதான் பாரதிய யுவ சக்தி டிரஸ்ட். 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்குப் போன லட்சுமி வெங்கடேசன், அங்கு வேல்ஸ் இளவரசரைச் சந்தித்தார். பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்கள் சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கி, அதைச் சிறப்பாக நடத்தத் தேவையான உதவிகளை வேல்ஸ் இளவரசர் செய்துவருவது பற்றி அறிந்தார். `ஏன் இந்தியாவிலும் அப்படியோர் அமைப்பைத் தொடங்கக் கூடாது?’ என்ற யோசனை தோன்றியது. இந்தியாவுக்கு வந்தவுடன் தன் திட்டத்தை ஜே.ஆர்.டி டாடாவிடம் சொன்னார். அவரின் வழிகாட்டுதலில் 1992-ம் ஆண்டு, `பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்’ தொடங்கப்பட்டது.
சிறப்பாகத் தொழில் செய்யும் உத்வேகம்கொண்டவர்களுக்கு, வங்கியிலிருந்து தொழில் கடன் பெற்றுத் தருவதில் தொடங்கி, தொழில் நடத்துவது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகிறது பாரதிய யுவ சக்தி டிரஸ்ட். இன்று இந்த நிறுவனத்தில் 4,800 மென்ட்டார்கள் இருக்கிறார்கள். தொழில் நடத்துவதில் தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதுதான் இந்த மென்ட்டார்களின் முக்கியப் பணி.
இந்தியா முழுக்க இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வழிகாட்டி, பயிற்சியளித்து, 6,500-க்கும் அதிகமான தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறது இந்த நிறுவனம். இதன் மூலம் இந்தியாவில் 2,50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. எண்ணற்ற தொழில்முனைவோர்களையும், ஏராளமான வேலைவாய்ப்புகளையும் தொடர்ந்து உருவாக்கிவரும் பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டுக்கு ‘இன்ஸ்ட்டிடியூசனல் பிசினஸ் மென்டார்’ விருது வழங்கி கௌரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்.