-
லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு
எம்.எம்.முருகப்பன்
சேர்மன்
முருகப்பா குரூப்
1900-ம் ஆண்டு, திவான் பகதூர் ஏ.எம்.முருகப்பா செட்டியாரால் பர்மாவில் தொடங்கப்பட்டது `முருகப்பா குழுமம்.’ டிரேடிங் மற்றும் வங்கிச்சேவை என இரு தொழில்களையும் சிறப்பாகச் செய்தார் திவான் பகதூர் ஏ.எம்.முருகப்பா செட்டியார். அவர் தொடங்கிய முருகப்பா குழுமம் இன்று, வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு, சைக்கிள், சர்க்கரை, உரம், தேயிலைத் தோட்டம், அப்ரேஸிவ் (abrasives) என்று சொல்லப்படுகிற சாணைப் பொருள்கள் தயாரிப்பு, வங்கிசாரா நிதி நிறுவனங்கள், பொதுக்காப்பீடு என பலவிதமான தொழில்களில் பெயர்பெற்று விளங்குகிறது. இந்தக் குழுமத்தின் நிறுவனங்களான கார்போரண்டம் யூனிவர்சல், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி, சோழமண்டலம் எம்.எஸ்.ஜெனரல் இன்ஷூரன்ஸ், கோரமண்டல் இன்டர்நேஷனல் கம்பெனி, இ.ஐ.டி பாரி (இந்தியா), பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா ஆகியவை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் புகழ்பெற்று விளங்குகின்றன. இப்படிப்பட்ட குழுமத்தை அதன் பாரம்பர்யப் பெருமையோடு, நவீனத் தொழில்நுட்பம், எதிர்காலம் இவற்றுக்கேற்றபடி திட்டமிட்டு, வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் பணியை மனநிறைவோடு செய்துவருகிறார் முருகப்பா செட்டியார் குடும்பத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த எம்.எம்.முருகப்பன்.
சென்னையிலுள்ள அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படித்தவர். படித்து முடித்தபிறகு, குழுமத் தொழில் நிறுவனங்களில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பல நிலைகளில் பயிற்சி பெற வேண்டும் என்பது முருகப்பா குழுமத்தின் நடைமுறை. எம்.எம்.முருகப்பனும் கார்ப்போரண்டம் யூனிவர்சல் நிறுவனத்தில் அப்படிப் பயிற்சியைத் தொடங்கி, நிர்வாகத்தை நன்கு கற்றுத் தேர்ந்து, படிப்படியாக உயர்நிலையை அடைந்தார்.
தொழில் நுணுக்கங்களைக் கற்றதும், கார்போரண்டம் யூனிவர்சல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய அளவில் இயங்கிவந்த இந்த நிறுவனத்தை, ஒரு சர்வதேச நிறுவனமாக மாற்றிய பெருமை எம்.எம்.முருகப்பனையே சாரும். கடந்த 30 ஆண்டுகளில் முருகப்பா குழுமம் அடைந்திருக்கும் அபார வளர்ச்சிக்கு எம்.எம்.முருகப்பன் ஆற்றிய பணியும், அயராத உழைப்பும் மிக முக்கியமான காரணங்கள். `ஏ.எம்.எம் அறக்கட்டளை’யில் முக்கியப் பங்கு வகிப்பதன் மூலம் கல்வி, உடல்நலம், விளையாட்டு எனப் பலவிதமான சமூக சேவைப் பணிகளையும் ஆற்றிவருகிறார் எம்.எம்.முருகப்பன். 50,000 தொழிலாளர்கள்... 28 பிசினஸ் நிறுவனங்கள்... என 37,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கும் முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன் அவர்களுக்கு லைஃப் டைம் அச்சீவ்மென்ட் விருது வழங்கி கௌரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்.