-
செல்ஃப்மேடு ஆன்ட்ரபிரனர் அவார்ட்
எம்.பொன்னுசுவாமி
சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டர்
பொன் ப்யூர் கெமிக்கல்ஸ்
வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரும், அதை சரியாகக் கண்டறிந்து முன்னேறி செல்வதுதான் நல்ல தொழிலதிபருக்கான இலக்கணம். தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் எதையுமே விட்டுவிடாமல் தொழில் முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக அவற்றை மாற்றி இன்று சர்வதேச அளவில் கிளைபரப்பி உயர்ந்திருக்கிறார் பொன் ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எம்.பொன்னுசுவாமி. திருசெங்கோட்டுக்கும் ஈரோட்டுக்குமிடையே இருக்கிற கொக்கராயன்பேட்டைபுதூர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தார் பொன்னுசுவாமி. தினமும் 17 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்தே பள்ளிக்குச் செல்வார். பள்ளிப் படிப்பு, பின் கோவையில் கெமிக்கல் படிப்பு முடித்து, சென்னையில் ஒரு நிறுவனத்தில் மாதம் 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தார்.
அதன்பிறகு, ஆறு ஆண்டுகள் தன் பெரியப்பா மகனின் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் மாதத்திற்கு 650 ரூபாய். அந்த நேரத்தில்தான் அவருக்குத் திருமணம் முடிந்தது. `இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது’ என்கிற நிலையில், சொந்தத் தொழில் செய்யும் முடிவை எடுத்தார். நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி சென்னையில் கெமிக்கலை விநியோகம் செய்யும் ஒரு சிறு நிறுவனத்தைத் தொடங்கினார். நண்பருக்காக வியாபாரம் பேசப்போன இடத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். திருச்சியிலிருந்து கெமிக்கல்களை வாங்கி, தமிழகம் முழுக்க விற்பனை செய்யத் தொடங்கியவர், ஈரோட்டில் தன் முதல் கிளையைத் தொடங்கினார். பத்தே ஆண்டுகளில் ஒரு கிளை, பத்து கிளைகளாக மாறின. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தைத் தாண்டி மும்பை, டெல்லி வரை விரிவடைந்தது அவரது பிசினஸ். 2008-லும் 2012-லும் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை எல்லாம் எதிர்த்துப் போராடி, வெற்றி கண்டார். சென்னையில் ஒரு சிறிய குடோனில் தொடங்கிய பொன்னுசுவாமியின் பயணம் இன்று இலங்கை, சிங்கப்பூர் கடந்து ஆஸ்திரேலியா வரை முன்னேறியிருக்கிறது.
வெறும் 36,000 ரூபாயில் தொடங்கிய `பொன் ப்யூர்’ ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய்க்கு டர்ன்ஓவர் செய்கிறது. டிரேடிங் என்பதைத் தாண்டி, உற்பத்தி, ஆர் & டி, லாஜிஸ்ட்டிக் எனப் பல துறைகளிலும் வீறுநடை போட்டுவருகிறார் பொன்னுசுவாமி. ஆங்கிலத்தின் அரிச்சுவடிகூட தெரியாமல் தொழிலுக்கு வந்த பொன்னுசுவாமி, இன்று உலகமே வியந்து பார்க்கும் தொழிலதிபராக உயர்ந்து நிற்கிறார். தோல்விகளை கல்வியாகவும், வெற்றிகளைப் படிகளாகவும் மாற்றிக்கொண்டு மேலும் மேலும் வளர்ந்துவரும் `பொன் ப்யூர்’ பொன்னுசுவாமிக்கு செல்ஃப்மேடு ஆன்ட்ரபிரனர் விருது வழங்கி கௌரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்.