-
சோஷியல் கான்ஷியஸ்னெஸ் அவார்ட்
பால் பேசில்
ஃபவுண்டர் & சி.இ.ஓ
வில்குரோ
தொழில் தொடங்குவதன் நோக்கமே லாபம்தான். ஆனால், சமூக அக்கறையுடன்கூடிய தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் வர்த்தகரீதியில் லாபம் ஈட்டும் வரை பலவகைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டியவையாக உள்ளன. அந்தப் பாதுகாப்பைத் தரும் அரிய சேவையைச் செய்துவருபவர்தான் பால் பேசில்.
கேரளா மாநிலம், கொச்சியில் படித்த பால் பேசில், பிறகு போபாலில் உள்ள, `இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஃபாரஸ்ட் மேனேஜ்மென்ட்’டில் படித்தார். படிப்பு முடிந்ததும், கேரளாவில் தோட்டக்கலைத்துறையில் பணிக்குச் சேர்ந்தார். கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க விவசாயச் சந்தை ஒன்றை உருவாக்கினார். `விவசாயிகளுக்கு உதவியதுபோலவே, சமூக அக்கறையுடன் செயல்படும் எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் உதவ வேண்டும்’ என்று நினைத்தார்; களத்தில் இறங்கினார். ‘ரூரல் இன்னோவேஷன் நெட்வொர்க்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம்தான் 2001-ம் ஆண்டு ‘வில்குரோ’வாக உயர்ந்தது.
வில்குரோ நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளில், இந்தியாவின் 19 மாநிலங்களில், சமூக அக்கறையுடன்கூடிய 279 நிறுவனங்களுக்கு ஏறக்குறைய 1.79 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. உரிய வழிகாட்டுதலால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவியிருக்கிறது. கமல் கிஷான், ஃபார்ம்ஹார்வெஸ்ட், குரோபோமேக், ஸ்கில் ட்ரெய்ன் முதலான சிறிய நிறுவனங்களை, பெரிய நிறுவனங்களாக வளர்த்தெடுத்திருக்கிறது வில்குரோ. `ஐபிட்ச்’ என்ற அமைப்பின் மூலம் வித்தியாசமாக யோசித்து பிசினஸ் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு ‘சீட் (seed) ஃபண்டிங்’கைப் பெற்றுத் தருகிறது.
சமூக அக்கறையுடன்கூடிய தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் வில்குரோ நிறுவனத்தின் ஃபவுண்டர் மற்றும் சி.இ.ஓ பால் பேசிலுக்கு சோஷியல் கான்சியஸ்னெஸ் விருது வழங்கி கௌரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்.