-
ஸ்டார்ட்அப் சாம்பியன் அவார்ட்
சுரேஷ் சம்பந்தம்
ஃபவுண்டர் ஆரஞ்ச்ஸ்கேப்
சி.இ.ஓ கிஸ்ஃப்ளோ
ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்த வேண்டுமெனில், இன்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும்; சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்ந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் அடிப்படைத் தகுதிகள். ஆனால், இந்தத் தகுதிகள் ஒன்றுகூட இல்லாமல் மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைபரப்பி வெற்றி பவனி வருகிறார் சுரேஷ் சம்பந்தம்.
கடலூரைச் சேர்ந்த சுரேஷ் சம்பந்தம், 1990-ல் ப்ளஸ் டூ முடித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் சேர நினைத்தார். அதற்கு ரூ.5 லட்சம் தேவைப்பட்டது. தவிர, அப்பாவின் ரியல் எஸ்டேட் தொழில் சில லட்ச ரூபாய்க் கடன், வழக்கு போன்ற சிக்கல்களால் முடங்கிக் கிடந்தது. அந்தத் தொழிலில் இறங்கிப் பிரச்னைகளைச் சரிசெய்ய முடிவெடுத்தபோது சுரேஷூக்கு வயது வெறும் 17.
கடலூரில் டைப்ரைட்டிங் பயிலச் சென்ற இடத்தில், 50 ரூபாயில் கம்ப்யூட்டரை ஆபரேட் செய்யக் கற்றுக்கொண்டார். மேற்கொண்டு கம்ப்யூட்டர் பாடங்களைக் கற்றுத்தர யாருமில்லாததால், சுயம்புவாகத் தானே கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தானே கற்ற கம்ப்யூட்டர் கல்வியோடு பெங்களூருவில் வேலை தேடினார்; ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கே அவருக்குக் கிடைத்தது அனுபவத்தை வைத்து `ஆரஞ்ச்ஸ்கேப்’ நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார்.
நான்கு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஆரஞ்ச்ஸ்கேப் இன்றைக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்; 160 நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இவரது புராடெக்டைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். `சாஃப்ட்வேர் அஸ் அ சர்வீஸ்’ என்று சொல்லப்படும் `சாஸ்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழகம் 1 டிரில்லியன் டாலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்று குறிப்பிட்டு அதற்கான வழிகளைச் சொல்லி, தமிழக இளைஞர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் சுரேஷ் சம்பந்தம். `சாஸ் பூமி’ என்ற கருத்தரங்கை கருத்தொற்றுமையுடைய மற்ற தொழில்முனைவோர்களுடன் சேர்ந்து ஆண்டுதோறும் நடத்திவருகிறார். பணியாளர்களிடம் வித்தியாசமான அணுகுமுறை, புதுமையான புராடெக்டுகள், கிரியேட்டிவான பணிச்சூழல்... என ஸ்டார்ட்அப்களில் கெத்து காட்டும் ஆரஞ்ச் ஸ்கேப்பின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தத்துக்கு `ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது வழங்கி கெளரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்.